×

7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள யானைகவுனி மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

சென்னை: ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள யானைகவுனி மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தினார். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராயபுரம் மண்டலத்தில் யானைகவுனி பால சாலையில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: யானைகவுனி மேம்பாலம் சேதம் காரணமாக மூடப்பட்டது. ஏற்கனவே சேதமடைந்த மேம்பாலத்தை இடிப்பதற்கு 2018ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. மேம்பாலம் கட்டப்படுவதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 2019ம் ஆண்டு ஒன்றிய இணை அமைச்சருக்கு கடிதம் எழுத்தப்பட்டது. தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து பணிகளை விரைவில் முடிக்கவேண்டும் கோரிக்கை வைத்து கடிதம் எழுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மேம்பால பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதன் ஒரு பகுதியாக ரயில்வே மற்றும் மாநகராட்சி இணைந்து செலவை பகிர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அதன் இதர செலவுகளை தெற்கு ரயில்வே ஏற்றுக்கொண்டு பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

பல்வேறு ஆய்வுகள் மற்றும் வலியுறுத்தலுக்கு பிறகு 2022 ஜூன் மாதம் மேம்பால பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் 7 ஆண்டுகளாகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படவில்லை. இந்த மேம்பாலம் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது என ரயில்வே துறை பெறுப்பேற்றுள்ளது. இதனால் மக்கள் போக்குவரத்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதால் மேம்பாலத்தின் ஒரு பாதை வருகிற பிப்ரவரி மாதத்திற்கு முடிக்கப்படும் என ரயில்வே பொதுமேலாளர் உறுதியளித்துள்ளார். இந்த பணிகள் முடிவடைந்தால் இப்பகுதிகளுக்கு போக்குவரத்து பிரச்னையிலிருந்து முழு தீர்வு கிடைக்கும் என்றார்.

அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கணேசபுரம் மேம்பாலம் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விளையாட்டு துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறையுடன் யானைகவுனி மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. மாநகராட்சியின் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்வே துறையின் சார்பில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 7 ஆண்டாக நிலுவையில் உள்ள யானைகவுனி மேம்பாலப்பணிகளை விரைவில் முடிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

The post 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள யானைகவுனி மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Yaanigouni ,Dayanithi Maran ,CHENNAI ,Dayanidhi Maran ,Yianikauni ,Yianidi Maran ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு