×

தமிழக அரசு துறைகளில் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசுத் துறைகளுக்கு 2024ல் 18 வகையான பணிகளுக்கு சுமார் 3,772 பேர் போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. அரசு வேலைக்காக 1.30 கோடி பேர் காத்திருக்கும் நிலையில், பத்தாயிரத்தில் மூவருக்கு மட்டும் தான் அரசு வேலை என்பது படித்த இளைஞர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023ல் மொத்தம் 29 வகையான பணிகளுக்கு போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதுவரை 13 போட்டித் தேர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கின்றன; அதிலும் பல தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. அரசுத் துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 பேர் ஓய்வு பெறுகின்றனர். அவை முழுமையாக நிரப்பப்பட்டால் ஆண்டுக்கு 50ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைக்கும். அரசே ஆணையிட்டால் கூட, தேர்வாணையம் தயாராக இல்லை. இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை கனவாகி விடும். இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்காமல் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது; சமூக நீதியையும் ஏற்படுத்த முடியாது. இதை உணர்ந்து அரசுத் துறைகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் பேருக்காவது வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

The post தமிழக அரசு துறைகளில் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ramadoss ,CHENNAI ,PAMC ,Ramadas ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...