×

திருநங்கையை வெட்டி நகை பறிப்பு; ரவுடி சிறையில் அடைப்பு: கார் பறிமுதல்; தனிப்படை அமைப்பு

அண்ணாநகர்: சென்னை மதுரவாயல் அடுத்த துண்டலம் கன்னியம்மன் தெருவை சேர்ந்த திருநங்கைகள் மடோனா(25) ஆஷிசிகா(21) மற்றும் வருணிகா(23). இவர்கள் ஒரே வீட்டில் வாடகைக்கு வசித்தனர். நேற்றுமுன்தினம் இரவு காரில் வந்த 4 பேர், மடோனாவின் தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு 3 செல்போன்கள், நகை ஆகியவற்றை பறித்து அவர்கள் வந்த காரில் சென்றுவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னை காவல் கட்டுபாட்டுஅறையில் இருந்து போலீசார் வந்து விசாரணை நடத்திவிட்டு கோயம்பேடு போலீசாருடன் காரை பின்தொடர்ந்தபோது காரில் இருந்து குதித்து தப்ப முயன்ற வாலிபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி எபினேசர்(28) என்பதும் இவர்மீது அரும்பாக்கம், திருமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி, செல்போன் பறிப்பு என 12 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலீசாரிடம் ரவுடி எபினேசர் கூறியதாவது; அரும்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுஅருந்த சென்றபோது கடை பூட்டியிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினோம். அப்போது அங்கு காரில் வந்த 3 பேரில் ஐயப்பன் என்பவர் என்னை அழைத்து மதுரவாயல் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது அங்கு சென்று மது அருந்தலாம் என்று காரில் அழைத்து சென்றார்.

மதுரவாயல் பகுதியில் 4 பேரும் மது அருந்தியபோது மேலும் மதுஅருந்துவதற்கு பணம் இல்லாததால் திருநங்கை வீட்டில் புகுந்து வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பி செல்லும்போது போலீசார் விரட்டி வருவதை அறிந்ததும் அவர்களிடம் இருந்து தப்பி செல்வதற்கு காரில் இருந்து குதித்து தப்ப முயன்ற போது என்னை போலீசார் பிடித்துவிட்டனர். என்னுடன் வந்த 3 பேர் யார் என்று தெரியாது’ என்றார். இதையடுத்து கார் நம்பரை வைத்து விசாரணை நடத்தியபோது திருமங்கலம் 100 அடி சாலையில் ஒரு காரின் பின்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டு நிற்பதாக கிடைத்த தகவல்படி தனிப்படை போலீசார் சென்று பார்த்தபோது திருட்டு கும்பல் பயன்படுத்திய கார் என்பது தெரியவந்தது.

போலீசாருக்கு பயந்து காரை விட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. அந்த காரை பறிமுதல் செய்து 3 பேரை பிடிக்க மதுரவாயல் துணை ஆணையர் உமையாள் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், 3 உதவி ஆய்வாளர்களின் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

The post திருநங்கையை வெட்டி நகை பறிப்பு; ரவுடி சிறையில் அடைப்பு: கார் பறிமுதல்; தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Annanagar ,Madonna ,Ashishika ,Varunika ,Thundalam Kanniyamman street ,Maduravayal, Chennai ,Dinakaran ,
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...