×

ஐயப்ப பக்தர்கள் வேன் மோதியதில் 2 பேர் பலி

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள சென்றாயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன்(63). டிரைவரான இவர், தனியார் பள்ளியின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அந்த வாகனத்தில் கிளீனராக சித்தையன்(70) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று இருவரும் டூவீலரில் வாழப்பாடிக்கு சென்றுள்ளனர்.இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் டிரைவரான ராஜேஷ்(34) என்பவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து, சபரிமலை செல்வதற்காக 20 பக்தர்களுடன் வேனில் புறப்பட்டார்.

ஏத்தாப்பூர் அடுத்த முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, வளைவான பகுதியில் திரும்ப முயன்றபோது சுந்தரராஜன் ஓட்டிவந்த டூவீலர் மீது வேன் மோதியது. இதில், சுந்தரராஜன் மற்றும் சித்தையன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் சுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சித்தையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், வாழப்பாடி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சுந்தரராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி சித்தையன் உயிரிழந்தார். இந்த விபத்தில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post ஐயப்ப பக்தர்கள் வேன் மோதியதில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Vazhappadi ,Sundararajan ,Gandayanpalayam ,Salem district ,
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்