×

திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் ஏழுமலையான் தரிசனம் 6 மணிநேரம் நிறுத்தம்: கோயில் முழுவதும் மூலிகை கலவை தெளிப்பு

திருமலை: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதற்காக 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோயில் முழுவதும் மூலிகை கலவை தெளிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 23ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதன் வழியாக ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு ஆழ்வார் திருமஞ்சனம் தொடங்கியது.

மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டது. பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இப்பணிகள் காலை 11 மணி வரை நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பகல் 12 மணியளவில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் காலை 6 மணி முதல் 12 மணி வரை என சுமார் 6 மணி நேரம் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை.

The post திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் ஏழுமலையான் தரிசனம் 6 மணிநேரம் நிறுத்தம்: கோயில் முழுவதும் மூலிகை கலவை தெளிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Alvar ,Thirumanjanam ,Tirumala ,Vaikunda Ekadasi ,Eeumalayan ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்