திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் சங்கமம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளுக்கு சங்க செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் வேலுமணி, துணைத் தலைவர் ரோஷன்குமார், துணை செயலாளர் அமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் வெங்கத்தூர் ஊராட்சி தலைவர் சுனிதா பாலயோகி, மாவட்ட கவுன்சிலர் தினேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடேசன், யோகானந்தம், தொழிலதிபர்கள் பிரேம்குமார், சுந்தர்ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து 6 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான இந்த போட்டிகளில் தனித்திறன், ஒற்றைக் கம்பு சுற்றுதல், இரட்டைக் கம்பு சுற்றுதல் போன்ற போட்டிகளில் சிலம்ப வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் திருவள்ளூர், ஸ்ரீநிகேதன் பள்ளி, குறிஞ்சி மெட்ரிகுலேஷன் பள்ளி, புனித அன்னை மெட்ரிகுலேசன் பள்ளி, செங்கல்பட்டு அன்னை வேளாங்கன்னி மெட்ரிகுலேஷன், காஞ்சிபுரம் ஹயக்ரீவர் மெட்ரிகுலேசன் ஆகிய பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் வெற்றிபெற்று சாதனை படைத்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மிஸ்டர் தமிழ்நாடு திலீபன், மணவாளநகர் கீதா பவன் உரிமையாளர் பிரபு ஆகியோர் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.
The post மாநில அளவிலான சிலம்பப் போட்டி: 6 முதல் 16 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.