×

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு தாமிரபரணி உபரிநீரை கொண்டு செல்ல சோதனை ஓட்டம்

சென்னை: தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி-கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது) அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு கலைஞர் ஆட்சியின்போது நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

முதல் 3 நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலைப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் (56933 ஏக்கர்) பாசன உறுதி பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்களும் பயன்பெறும்.

தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இத்திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சரிடமும், நீர்வளத்துறை அலுவலர்களுடனும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசித்தார். இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்ட மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு தாமிரபரணி உபரிநீரை கொண்டு செல்ல சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamiraparani ,Tirunelveli, Tuticorin District ,Chennai ,Thamirparani ,Tirunelveli, Thoothukudi district ,
× RELATED உளவுத்துறை ரிப்போர்ட், ரூ.4 கோடி...