×

பார்லி. புகை குண்டு தாக்குதலில் காங்.க்கு தொடர்பு என சர்ச்சை: அண்ணாமலை மீது போலீசில் புகார்

கோவை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறை கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் அஸ்மத்துல்லா தலைமையில் கட்சி நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சமூக ஊடக தளத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து கடந்த 13/12/23 அன்று நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசிய நிகழ்வை பற்றி ஒரு காணொளி வெளியிட்டிருந்தனர்.

அந்த காணொளியில் நாடாளுமன்றத்தை காக்க தவறிய மோடி அரசின் கையாலாகாததனத்தை மறைப்பதற்காக புகை குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண்மணி காங்கிரஸ் கட்சியின் அனுதாபி என்றும் அந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருக்கலாம் என்று ஒரு பொய்யான அவதூறு செய்தியை வீடியோவில் பகிர்ந்துள்ளனர். இந்த காணொளியில் காங்கிரஸ் கட்சியின் மீதும் அதன் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி எம்பி மற்றும் ராகுல்காந்தி எம்பி ஆகியோர் மீதும் அவதூறான பொய் செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் நற்பெயருக்கு களங்கம் விளைக்கும் வகையில் அவதூறு செய்தி வெளியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை , தேசிய ஊடக பிரிவு செயலாளர் அமித் மால்வியா மற்றும் சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post பார்லி. புகை குண்டு தாக்குதலில் காங்.க்கு தொடர்பு என சர்ச்சை: அண்ணாமலை மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Barley ,Annamalai ,Coimbatore ,Tamil Nadu Congress Committee Information Technology and Social Media Department ,Coimbatore District ,Incharge ,Azmatullah ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...