சிவகாசி, டிச.16: சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள பிள்ளையார்கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் பேருந்துகள் பிள்ளையார் கோவில் பஸ்நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது. இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால் சாலையில் காத்திருந்து மக்கள் பேருந்தில் பயணிக்க வேண்டியுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு வாகன பெருக்கம் அதிகமாக இருக்கும். காமராஜர் சிலை வழியாக திருத்தங்கல் செல்லும் சாலை இங்கிருந்து பிரிந்து செல்கிறது.
இரண்டு சாலை சந்திக்கும் இடமாக உள்ளதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இது போன்ற நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இங்கு போதுமான போக்குவரத்து பாதுகாப்பு எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்படவில்லை. இங்கு நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் காட்சி பொருளாக நிற்கிறது. இரவில் கவனகுறைவாக வரும் வாகனங்கள் இங்குள்ள சாலை சந்திப்பு டிவைடர்கள் மீது மோதி விபத்துகுள்ளாகி வருகிறது.
இங்கு பஸ்நிறுத்தம் அமைந்துள்ளதால் சாலையில் காத்திருக்கும் பயணிகளுக்கு விபத்து அபாயம் நிலவுகிறது. மேலும் இங்கு பேருந்துகள் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கு தனியாக நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பஸ்நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள நிழற்குடை சேதமடைந்து பயனற்று கிடக்கிறது. எனவே பஸ்நின்று செல்லும் இடங்களில் புதிதாக நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சிவகாசி பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.