×

தேவிப்பட்டினத்தில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது

ராமநாதபுரம்: தேவிபட்டினத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை கடத்திய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்து 58 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா தேசிய பூங்கா வனத்துறையினருக்கு தேவிபட்டினம் கடற்கரையிலிருந்து கடல் அட்டை கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் பிரதாப், வனவர் ராஜேஷ்குமார், வனகாப்பாளர் பாலமுருகன் ஆகியோர், நேற்று தேவிபட்டினம் சோதனைச் சாவடியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு காரை சோதனையிட்டபோது அதில் 2 சாக்கு மூட்டைகளில் 58 கிலோ பதப்படுத்தப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கடல் அட்டையை கடத்தி வந்த தேவிபட்டினத்தைச் சேர்ந்த கமருதீன் மகன் நவாப் சுல்தான்(42) என்பவரை கைது செய்து, காரையும்,கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

இவர் கடல் அட்டையை இலங்கைக்கு கடத்துவதற்காக கீழக்கரையைச் சேர்ந்த அசன்அலி(62) என்பவருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அதனையடுத்து அசன்அலியையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் நவாப் சுல்தான், அசன்அலி ஆகியோரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post தேவிப்பட்டினத்தில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Devipatnam ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்...