×

வெள்ள நிவாரணம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்: முத்தரசன்

சென்னை: வெள்ள நிவாரணம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மிக்ஜாம் புயல் தாக்குதலில் சென்னை பெரு மாநகரும் அதன் சுற்றுவட்டார புறநகர் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்து போனது. வரலாறு காணாத இயற்கை பேரிடரில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களது மறுவாழ்வுக்கு உதவிடும் நிவாரண பணிகளில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர், பெருமாநகர் ஆணையர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை அணிதிரண்டு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில் பாஜகவினரும் அதன் ஆதரவாளர்களும் ஒன்றிய அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருப்பதாக தவறான செய்தியை பரப்பும் மலிவான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒன்றிய அரசு இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இதன்படி நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் தவணையாக ரூ.450 கோடி கடந்த ஜூலை மாதத்திலும் வழங்கியுள்ளது இரண்டாவது மற்றும் இறுதித் தவணையாக இந்த நிதியாண்டின் இறுதியில் வழங்க வேண்டிய தொகையை ரூ.491 கோடியை தற்போது வழங்கியுள்ளது.

இந்த உண்மை நிலையை கருத்தில் கொண்டால் பாஜக ஒன்றிய அரசு மிக்ஜம் புயல் பேரிடர் கால நிவாரணத்திற்காக சல்லிக்காசும் கொடுக்காமல் வாய் வடை சுடும் வாய் சவடால் பேசி வருவதை தமிழ்நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்பை தொடர்ந்து “வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டம்“ வகுக்கப்பட்டது. ஒன்றிய அரசின் சார்பில் ரூ.500 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு இப்போது தான் நிர்வாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

நிதி ஏதும் ஒதுக்கவில்லை. இந்த நிலையில் அடிப்படையற்ற ஆதாரமில்லாத செய்திகளை பரப்பி வருவதை பாஜகவினரும், சங்பரிவார் ஆதரவாளர்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்வதுடன் தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.5060 கோடியை முழுமையாக வழங்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

The post வெள்ள நிவாரணம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்: முத்தரசன் appeared first on Dinakaran.

Tags : BJP ,Mutharasan ,Chennai ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...