×

வீட்டிலிருந்து மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

நாகர்கோவில், டிச.13: நாகர்கோவில் புத்தேரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் செல்லும் கால்வாயில் நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து கிடந்தவர் யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இடலாக்குடி முகமதியார் தெரு பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (32) என்பவரை காணவில்லை என்று வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஷாஜகானின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது ஷாஜகான் என்பதை உறுதி செய்தனர்.

கடந்த 7ம் தேதி திருநெல்வேலிக்கு வேலைக்கு செல்வதாக ஷாஜகான் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு 2, 3 நாட்கள் அவரை பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில் நேற்று வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தநிலையில் அவர் பாலத்தின் கீழ் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷாஜகான் புத்தேரி குளத்துக்குள் தவறி விழுந்து இறந்து அவரது உடல் மடை வழியாக சானலுக்குள் இழுத்து வரப்பட்டு இருக்குமா? அல்லது சானலில் விழுந்து இறந்திருப்பாரா? என்பது தெரிய வில்லை. யாராவது அடித்து கொலை செய்து வீசி இருப்பார்களோ? என்ற சந்ேதேகமும் காவல்துறையினருக்கு உள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே ஷாஜகான் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என்று போலீசார் கூறினர். இரவு நேரங்களில் பாலத்தின் கீழ், சமூக விரோத கும்பல் சுற்றி வருகிறது. கார், பைக்குகளில் அமர்ந்து மது அருந்தி வருகிறார்கள். சில சமயங்களில் கஞ்சா கும்பலும் அமர்ந்துள்ளது. எனவே இதை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

The post வீட்டிலிருந்து மாயமான வாலிபர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Putheri ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது