×

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டபாமக பிரமுகர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பாமக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், ரங்கம் மங்கம்மா நகரை சேர்ந்தவர் பிரபு (எ) ஆம்புலன்ஸ் பிரபு (51). இவரது மனைவி உமாமகேஸ்வரி (48). புத்தூர் ஆபீஸசர்ஸ் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரபு, அரசு மருத்துவமனை எதிரே  தாயார் ஹோம் கேர் சர்வீஸ் என்ற பெயரில் வீடுகளுக்கு மருத்துவ சேவைக்கு நர்சுகள் அனுப்பி வைக்கும் நிறுவனம் மற்றும் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் கார் வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், கார் வாங்கி விற்றது தொடர்பான மோசடி வழக்கில் நேற்றுமுன்தினம் இரவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பிரபு கையெழுத்து போட்டு விட்டு தனது அலுவலகத்துக்கு வந்து உட்கார்ந்திருந்தார். அப்போது இரவு 10 மணியளவில் மாஸ்க் அணிந்தபடி அலுவலகத்துக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள், அரிவாள் மற்றும் கத்தியால் பிரபுவை சரமாரியாக வெட்டினர். இதில் பிரபு ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து சாவகாசமாக வெளியே சென்றனர். பிரபு கடை முன் இருந்த கேமராவில் பதிவாகியிருந்த இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் வைரலானது.

தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார், பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு விடப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து, திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் திடீர் நகரை சேர்ந்த லெட்சுமணன் (38), பாரதியார் நகரை சேர்ந்த ரியாஸ் ராஜேஷ் (24), பஷிர் (29), தஞ்சாவூர் மகாதேவபுரம் ராஜேஷ் பைலட் (30) ஆகிய 4 பேரை நேற்று அதிகாலை 1.30 மணியளவில் திருவெறும்பூரில் பதுங்கியிருந்த போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன் அடிதடி வழக்கு ஒன்றில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பிரபு, பின்னர் ஜாமீனில் வந்தார். பாமக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அணி முன்னாள் செயலாளராக இருந்தவர் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கொலையான பிரபு, ரவுடி பட்டியலில் ‘சி’ பிரிவில் உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு போலீசார் கடந்த 9ம்தேதி பிரபுவிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இதுதொடர்பான விசாரணைக்கு நாளை (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என போலீசார் உத்தரவிட்டு இருந்த நிலையில் பிரபு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவத்தில் கைதான நபர்களில் லெட்சுமணன் என்பவர், பிரபுவிடம் டிரைவராக வேலை பார்த்துள்ளார். தொடர்ந்து, வழக்கு ஒன்றில் அவர் சிறை சென்ற போது அவரது மனைவியிடம் பிரபு தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. தொழில் போட்டி காரணமாக பிரபுவுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அப்பு(எ) ஹரிகிருஷ்ணனுக்கும், கொலையான பிரபுவுக்கும் இடையே தொழில் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

The post திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டபாமக பிரமுகர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy Ramajayam ,Trichy ,Ramajayam ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...