×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நீதிபதி ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?: சிபிஐ விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று விளக்கம் அளிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாவட்ட ஆட்சியர், சார்பு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் ஹென்றி திபேன், ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றபத்திரிகையை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையை ஏற்ற அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். முறையாக விசாரணை நடத்தாத நிலையில் இந்த வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்க அனுமதிக்க கூடாது. தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

அப்போது நீதிபதிகள், ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்துவிட்டு, மற்ற காவல் துறையினருக்கு எப்படி நற்சான்று வழங்கப்பட்டதா என்று சிபிஐ தரப்புக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சிபிஐ தரப்பு மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், குற்றபத்திரிகையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளதால் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். சிபிஐ விசாரணையில் எந்த தவறும் இல்லை. குறைகளைச் சுட்டி காட்டினால் அந்த அம்சங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், மீண்டும் விசாரணை நடத்தி குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய இன்னும் பத்து ஆண்டுகளாகும். துப்பாக்கி சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளம் காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? அல்லது கைவிடப்பட்டதா? என்று சிபிஐ விளக்கம் தர வேண்டும். சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை நகலை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நீதிபதி ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?: சிபிஐ விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Judicial Commission ,Thoothukudi ,CBI ,Chennai ,Judge ,Aruna Jagatheesan ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...