- அமைச்சர்
- பெரியகருப்பன்
- சென்னை
- கூட்டுறவுத் துறை
- தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் வர்த்தகக் கழகம்
- மிக்ஜாம்
- தின மலர்
சென்னை: ‘‘மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண உதவியாக ரூ.6000 ரொக்கமாக வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி ‘‘மிக்ஜாம்” புயல் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் துரிதமாக நடந்தது. தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கிடவும், இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை வழங்க மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் நியாய விலை கடைகளில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், பொதுமக்களுக்கு முறையாக சேர்க்க வேண்டிய நடவடிக்கைகள், அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜெ.விஜயராணி மற்றும் சிறப்புப்பணி அலுவலர் (தமிழ்நாடு கூட்டுறவு வங்கி) எம்.பி.சிவன் அருள் உட்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண நிதி ரூ.6000 வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்: அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.