×

ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 23 பேர் பலி: ஏராளமானோர் காயம்

பெஷாவர்: பாகிஸ்தானில் ராணுவ தளம் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர். தாலிபன் தீவிரவாதிகள் கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு முழுவதும் தாலிபன் தீவிரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். தெஹ்ரிக்-இ-தாலிபன் தீவிரவாத அமைப்பில் இருந்து பிரிந்து உருவான தெஹ்ரிக்-இ-ஜிகாத் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் கைபர் பக்துன்க்வா மாகாணம் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தேரா இஸ்மாயின்கான் மாவட்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் ராணுவ தளம் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய டிரக்கை மோத செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

தொடர்ந்து உடனே மற்றொரு தற்கொலை படை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஏராளமான வீரர்கள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பிற ராணுவ வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டு கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-ஜிகாத் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

The post ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 23 பேர் பலி: ஏராளமானோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Peshawar ,Taliban ,Pakistan ,Dinakaran ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி