×

மனைவியை குடும்பம் நடத்த அனுப்பாததால் வெறிச்செயல்; கல்லால் தாக்கி மாமனாரை கொன்று வீசிய மருமகன்: ஆத்தூர் அருகே பயங்கரம்

தம்மம்பட்டி: ஆத்தூர் அருகே மகள் மீது சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியதை தட்டி கேட்ட மாமனாரை கல்லால் தாக்கி படுகொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தம்மம்பட்டி நாகியம்பட்டி ஆண்டிக்குட்டையை சேர்ந்தவர் மருதை (எ) ஊசி (60), கூலி தொழிலாளி. இவர், தனது மகள் தனலட்சுமியை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கெங்கவல்லி உலிபுரம் அருகேயுள்ள புங்கமரத்துக்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளி சரவணன் (40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 12 மற்றும் 5 வயதில் 2 மகள்களும் உள்ளனர்.

விவசாய கூலி தொழிலாளியான சரவணன், கடந்த சில ஆண்டுகளாக தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் பகலில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சரவணன், தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார். இதனால் கோபித்து கொண்டு தனது தந்தை மருதையின் வீட்டிற்கு தனலட்சுமி சென்றுள்ளார். அங்கு இரவு 10 மணியளவில் குடிபோதையில் சரவணன் வந்துள்ளார். அப்போது, ‘தன் மனைவியை தன்னுடன் அனுப்பி வையுங்கள்’ என மாமனார் மருதையிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், ‘என் மகள் மீது சந்தேகம் கொண்டு அடித்து துன்புறுத்துவதால், அனுப்ப முடியாது. நீ இங்கிருந்து போ’ என்று கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதனால் மாமனார் மருதை, அருகில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து மருமகன் சரவணனை அடித்து அங்கிருந்து விரட்டி விட்டுள்ளார். இதற்காக ரோடு வரை சென்றுள்ளார். பிறகு திரும்பி வரவில்லை. தந்தை எப்படியும் வீட்டிற்கு வந்து விடுவார் எனக்கருதிய மகள் தனலட்சுமி, இரவில் தூங்கிவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை, அப்பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் அருகில் இருக்கும் ஆலமரத்துக்கு அடியில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மருதை இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், தனலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர். அவர் அதிர்ச்சியுடன் வந்து தனது தந்தை மருதையின் உடலை பார்த்து கதறி அழுதார். உடனே தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மருதையின் சடலத்தை மீட்டனர். அதில், தலை மற்றும் முகத்தில் கல்லால் தாக்கி படுகொலை செய்து, ஆலமரத்துக்கு அடியில் பள்ளத்தில் தூக்கி வீசியிருப்பது தெரியவந்தது. மருதையின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தனலட்சுமி போலீசில் கொடுத்த புகாரில், மருதையை சரவணன் அடித்து கொலை செய்து, போட்டிருப்பதாக கூறியிருந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தனது நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்துவார். இதனால் தான், கணவரிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு வந்தேன். இங்கு வந்தும் தகராறு செய்து, எனது தந்தையை அசிங்கமாக பேசினார்.

அப்போது அவர் விரட்டி விட்டார். ஆனால், இரவில் அவரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார் என கூறியுள்ளார்.
இதையடுத்து சரவணனை போலீசார் தேடியபோது, தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மாமனாரை மருமகன் கல்லால் தாக்கி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தன் மனைவியை தன்னுடன் அனுப்பி வையுங்கள்’ என மாமனார் மருதையிடம் மருமகன் கேட்டுள்ளார். அதற்கு மாமனார் மருதை, ‘என் மகள் மீது சந்தேகம் கொண்டு அடித்து துன்புறுத்துவதால், அனுப்ப முடியாது. நீ இங்கிருந்து போ’ என்று கூறியுள்ளார்.

The post மனைவியை குடும்பம் நடத்த அனுப்பாததால் வெறிச்செயல்; கல்லால் தாக்கி மாமனாரை கொன்று வீசிய மருமகன்: ஆத்தூர் அருகே பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Attur ,Dammampatti ,Athur ,Dinakaran ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...