×

திருச்சியில் பயங்கரம்; ஆம்புலன்ஸ் நிறுவன அதிபர் சரமாரி வெட்டிக்கொலை: 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சியில் ஆம்புலன்ஸ் நிறுவன அதிபரை மர்ம நபர்கள் சரமாரி வெட்டிக்கொலை செய்தனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரபு (45). இவர் அரசு மருத்துவமனை எதிரே  தாயார் ஹோம் கேர் சர்வீஸ் என்ற பெயரில், வீடுகளுக்கு மருத்துவ சேவைக்கு நர்சுகள் அனுப்பி வைக்கும் நிறுவனம் மற்றும் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் கார் வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வந்தார். பாமக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அணி முன்னாள் செயலாளர். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கார் வாங்கி, விற்றது தொடர்பான வழக்கில் நேற்றிரவு பிரபு அரசு மருத்துவமனை போலீசில், கையெழுத்து போட்டு விட்டு தனது அலுவலகத்துக்கு வந்து உட்கார்ந்திருந்தார். இரவு 9.35 மணியளவில் பேண்ட், சட்டையில் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்த 3 மர்ம நபர்கள், அலுவலகத்துக்குள் புகுந்து பிரபுவை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை சிதைக்கப்பட்டு பிரபு ரத்த வெள்ளத்தில் பலியானார். இதையடுத்து மர்ம நபர்கள் 3 பேரும் சாவகாசமாக வெளியே சென்றனர். இந்த காட்சி பிரபு கடை முன் இருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு விடப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பாமக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அணி முன்னாள் செயலாளராக இருந்த பிரபுவுக்கும், பாமக மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கடையை காலி செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் உறையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பிரபு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வந்தார்.

இப்பிரச்னைக்கு பின்னர் பிரபு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ரவுடி பட்டியலில் உள்ள பிரபு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி தொழிலதிபரும், அமைச்சர் நேருவின் சகோதரருமான ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு போலீசார் கடந்த சனிக்கிழமை பிரபுவிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணைக்கு நாளை (13ம் தேதி) ஆஜராக வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில்தான், பிரபு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கொலைக்கான காரணம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அரசு மருத்துவமனை சாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருச்சியில் பயங்கரம்; ஆம்புலன்ஸ் நிறுவன அதிபர் சரமாரி வெட்டிக்கொலை: 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...