×

வடசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை ஒரே மாதத்தில் 315 பேர் கைது, 170 வங்கி கணக்கு முடக்கம்: பொதுமக்கள், ஆசிரியர்கள் வரவேற்பு

வடசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஒரே மாதத்தில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 170 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு குட்கா விரும்பிகள் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ஆசிரியர்கள், பொதுமக்கள் போலீசார் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் குற்ற செயல்களை தடுப்பது, குற்ற செயல்கள் நிகழாமல் பாதுகாப்பது போலீசாருக்கு எப்போதுமே சவாலான ஒரு விஷயம். பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் போலீசார் எப்போதும் குற்ற செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். அதே நேரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை சமூக விரோதிகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் சம்பவங்களும் நடந்து கொண்டே வந்தன. காரணம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பொருள் நமது பக்கத்து மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் சர்வ சாதாரணமாக கிடைப்பதே ஆகும். இவற்றை வாங்கி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து பலரும் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தனர். அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் குட்கா விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அமைச்சர்கள் முதல் போலீஸ் உயர் அதிகாரிகள் வரை இதில் தொடர்புள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்காவுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், உயர் அதிகாரிகளின் கூட்டத்தை அடிக்கடி நடத்தி போதைப் பொருளை ஒழிக்க உத்தரவிட்டு வந்தார். இதனால், சென்னையில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனைக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்த ஒரு குற்ற செயலாக இருந்தாலும் சரி, அதில் முதலில் சிக்குவது வடசென்னை பகுதி. குறிப்பிட்ட பகுதியில் குற்ற செயல்களை தடுப்பதும், கஞ்சா மற்றும் குட்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் போலீசாருக்கு எப்போதும் சற்று சவாலான விஷயமாகவே இருந்து வந்தது. அந்த வகையில் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பொறுப்பேற்ற பிறகு, வடசென்னையில் உள்ள பிரச்னைகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து பல்வேறு அதிரடிகளை காட்ட ஆரம்பித்தார். அதன்படி குட்கா விற்பனை நடைபெறும் இடங்கள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறும் இடங்கள் குறித்து ரகசிய ஆய்வு நடத்தி, எந்தெந்த காவல் நிலைய பகுதிகளில் அதிக அளவில் விற்பனை நடைபெறுகிறது, எந்தெந்த போலீசார் இதற்கு உடந்தையாக உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை சேகரித்தார். அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டார். அதில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் காவலர்கள் கண்டிப்பாக மாற்றம் செய்யப்பட வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் அவர்கள் மீண்டும் அதே காவல் நிலையத்தில் தொடரக்கூடாது. அதேபோன்று கஞ்சா குட்கா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் எந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியிலும் விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் சில உஷாரான போலீசார் குட்கா மற்றும் கஞ்சாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு காவல் மாவட்டம், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம், பூக்கடை காவல் மாவட்டம், கொளத்தூர் காவல் மாவட்டம், அண்ணாநகர் காவல் மாவட்டம், கோயம்பேடு காவல் மாவட்டம் ஆகிய 6 காவல் மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த சுமார் 800 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது போலீஸ் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதே நேரத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனைக்கு ஆதரவாக செயல்பட்ட சில காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதில் சில உதவி கமிஷனர்களும் அடங்குவர். இதேபோன்று பல்வேறு காவல் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு சாதகமாக செயல்பட்டதாகக் கூறி சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். இதனால் அதிர்ந்து போன போலீசார் வடசென்னை பகுதியில் மொத்தமாக குட்கா மற்றும் கஞ்சா விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர். இதன் விளைவாக தற்போது வடசென்னை பகுதியில் பெருமளவு குட்கா மற்றும் கஞ்சா விற்பனை குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதாவது நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை வடசென்னை பகுதியில் 180 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3,000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 120 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கில் இருந்த சுமார் 28 லட்ச ரூபாய் பணம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று கஞ்சாவை பொறுத்தவரை கடந்த மாதம் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 50 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. குட்காவுக்கு எதிராக மட்டும் பூக்கடை பகுதியில் ஜெகநாதன் மற்றும் கோயம்பேடு பகுதியில் சுரேஷ், மூர்த்தி ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தொடர்ந்து குட்கா மற்றும் கஞ்சா விற்பவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து வட சென்னையில் பணிபுரியும் பெயர் கூற விரும்பாத இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், வழக்கமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் அவர்களை பிடித்து சாதாரண வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து வந்தோம். ஆனால் தற்பொழுது ஒரு பாக்கெட் குட்கா வைத்திருந்தால் கூட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வருகிறோம். இதனால் பெரும்பாலான கடைகளில் குட்கா விற்பதை நிறுத்தி விட்டார்கள். இதேபோன்று கஞ்சாவுக்கு எதிராகவும் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதனால் வடசென்னை பகுதியில் பெருமளவு கஞ்சா விற்பனை குறைந்துள்ளது. ஆரம்பத்தில் குட்காவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும்போது வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருளை விற்றால் அது சட்டப்படி குற்றம் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தபிறகு படிப்படியாக அவர்கள் தங்களது செயலை மாற்றிக் கொண்டனர். முன் வழக்குகள் இல்லாத பலரும் குட்கா வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் வெளியே வந்தவர்கள் இந்த வியாபாரமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர். ஒரு காலத்தில் எப்படி சாராயம் விற்கப்பட்டு அது தற்போது கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை வந்ததும் குடிமக்கள் அதனை மாற்றிக் கொண்டார்களோ, அதுபோல குட்காவை பயன்படுத்துபவர்களும் கண்டிப்பாக தங்களது செயலை மாற்றிக் கொள்வார்கள். எனவே போலீஸ் உயரதிகாரிகள் அறிவுறுத்தலின் படி தொடர்ந்து குட்கா மற்றும் கஞ்சாவுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

 

The post வடசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கை ஒரே மாதத்தில் 315 பேர் கைது, 170 வங்கி கணக்கு முடக்கம்: பொதுமக்கள், ஆசிரியர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Gutka ,
× RELATED வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி வெற்றி: 33 பேர் டெபாசிட் இழந்தனர்