×

மிக்ஜாம்’ புயல்: 5 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: மிக்ஜாம்’ புயல் காரணமாக 5 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதிக மழைப்பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.

சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் அந்த பகுதிகளில் சுமார் 90 முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இந்த புயல் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஒரு சில இடங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மிக்ஜாம்’ புயல்: 5 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : Migjam' ,CHENNAI ,Cyclone Migjam ,Mikjam' ,Dinakaran ,
× RELATED புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ...