×

ராஜஸ்தானில் பரபரப்பு; சுயேச்சை, உதிரி கட்சிகளை வளைக்க பாஜ, காங். தீவிரம்: போட்டி வேட்பாளர்களால் சிக்கல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தேர்தல் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் சுயேச்சைகள், உதிரி கட்சிகளின் ஆதரவை பெற பாஜ, காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இங்கு ஆளும் கட்சியான காங்கிரஸ் தோல்வி அடையும், பாஜ ஜெயிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய சில கருத்துக்கணிப்புகளும், நூலிழையில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என சில கணிப்புகளும் வெளியாகின. இதனால் தேர்தல் முடிவு மதில் மேல் பூனையாக இருக்கிறது.

நிலைமை இப்படி இருக்க, இரு கட்சியிலும் சீட் கிடைக்காமல் அதிருப்தி வேட்பாளர்களாக சொந்த கட்சியையே எதிர்த்து போட்டியிட்டவர்களால் இப்போது இரு கட்சிக்கும் சிக்கல் நிலவுகிறது. இரு கட்சியிலும் சுமார் 40 பேர் அதிருப்தி வேட்பாளராக சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர். இவர்களால் தேர்தல் முடிவில் பாதிப்பு ஏற்படுமோ என்பதால் இப்போதே அதிருப்தி வேட்பாளர்கள் மற்றும் பிற சுயேச்சைகளை தங்கம் பக்கம் இழுக்க பாஜ, காங்கிரஸ் இரண்டும் தீவிரமாக களத்தில் குதித்துள்ளன. இதுதவிர, தேவைப்பட்டால் உதிரி கட்சிகளின் ஆதரவும் தேவைப்படும் என்பதால் அவர்களையும் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இரு கட்சிகளும் தேர்தலுக்கு முன் எந்த கூட்டணியும் அமைக்கவில்லை என்றாலும் இப்போது பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதனால் ராஜஸ்தானில் ஆதரவு அரசியல் பரபரப்பாகி உள்ளது.

The post ராஜஸ்தானில் பரபரப்பு; சுயேச்சை, உதிரி கட்சிகளை வளைக்க பாஜ, காங். தீவிரம்: போட்டி வேட்பாளர்களால் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Baja, Cong ,JAIPUR ,BAJA ,CONGRESS ,Dinakaran ,
× RELATED ஷூவிற்குள் மறைந்திருந்து படமெடுத்து மிரள வைத்த பாம்பு