×

கொடுங்கையூரில் பரபரப்பு ரவுடிக்கு சரமாரி கத்திக்குத்து: 3 பேருக்கு வலைவீச்சு

பெரம்பூர்: கொடுங்கையூரில் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது ரவுடியை சரமாரியாக குத்திவிட்டு தப்பிய 3 பேரை தேடி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் சுந்தராம்பாள் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் குமார் (எ) கொக்கி குமார் (26). இவர் மீது கொடுங்கையூர், எம்கேபி.நகர் மற்றும் வியாசர்பாடி ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.

வியாசர்பாடி காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. இந்த நிலையில், நேற்று மதியம் கொடுங்கையூர் அமுதம் நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் குமார் டீ குடித்தபோது திடீரென 3 பேர் வந்து வாக்குவாதம் செய்துள்ளனர். திடீரென மூவரும் சேர்ந்து தாங்கள் வைத்திருந்த கத்தியால் கொக்கிகுமாரை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் விழுந்ததும் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பிச்சென்றது.

இதன்பிறகு காயம் அடைந்த கொக்கிகுமாரை அப்பகுதியினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கொக்கி குமாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

சமீபத்தில் கொக்கி குமார் பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதற்கு பழிவாங்கவே பாண்டி, அவரது நண்பர்கள் முனுசாமி, மகேஷ் ஆகியோர் வந்து கொக்கிகுமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாண்டி, முனுசாமி மற்றும் மகேஷ் ஆகியோரை கொடுங்கையர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post கொடுங்கையூரில் பரபரப்பு ரவுடிக்கு சரமாரி கத்திக்குத்து: 3 பேருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Kodungaiyur ,Perambur ,Kodunkaiyur ,Chennai ,Kodungaiyur… ,Dinakaran ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து