×

10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார் ஆளுநர்.. ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே முயற்சி : அமைச்சர் ரகுபதி சாடல்

டெல்லி : 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்துள்ளதாக செய்தி வந்திருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் 2வது முறையாக மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பியதால் சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியது தவறு.ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார்.

ஆளுநர். தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார் ஆளுநர். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயம். ஜனநாயகத்தை காப்பதற்காகவே மசோதாக்களை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் 10 மசோதாக்களை உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிர்வாகம் முடங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்பப் பெறுவதுதான் ஒரே தீர்வு.”என்று தெரிவித்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் 3 ஆண்டு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று அண்மையில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

The post 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார் ஆளுநர்.. ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே முயற்சி : அமைச்சர் ரகுபதி சாடல் appeared first on Dinakaran.

Tags : Governor ,President ,Minister ,Ragupati Saddal ,Delhi ,Ravi ,President of the Republic ,Ragupati ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...