காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைகள், குப்பையை கையாளுவது குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் மூலம் கூட்டாக மேற்கொள்வது குறித்து ஆலோசித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்மொழிவுகள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரை ஒட்டி அமைந்துள்ள செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நகர்புறத்தை ஒட்டிய ஊராட்சிகளில் நிலவும் குடிநீர், சாலை வசதி மற்றும் குப்பையை கையாளுவதில் உள்ள பிரச்னைகள் குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பொன்னையா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குநர், சென்னை மாநகராட்சி பிரதிநிதிகள், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகரை ஒட்டியுள்ள ஊராட்சிகள் சந்தித்து வரும் குடிநீர் பிரச்னைகள், குப்பையை கையாளுவது குறித்தும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் கூட்டாக மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்மொழிவுகள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஊராட்சிகளில் குடிநீர், குப்பை பிரச்னையை சரிசெய்வது தொடர்பாக ஆலோசனை: துறை அலுவலர்கள் முன்மொழிவுகள் அனுப்ப அறிவுறுத்தல் appeared first on Dinakaran.