திருத்தணி: திருத்தணி அடுத்த தாழவேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசிப்பவர் மோகன் என்பவரின் மகன் அசோக் என்ற அசோக்குமார்(37). இவர் திருவாலங்காடு வடக்கு ஒன்றிய புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தாழவேடு சமத்துவபுரம் நுழைவு வாயிலில் உட்கார்ந்திருந்தபோது, 3 இளைஞர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில், அசோக்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். அப்போது புரட்சி பாரதம் மாநில இளைஞர் அணி தலைவர் மடவூர் ஜி.மகா தலைமையில் உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி – நாகலாபுரம் கூட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, அசோக்குமாரை கொலை செய்த 3 இளைஞர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ், எஸ்ஐ ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என போலீசார் உத்தரவாதம் கொடுத்ததால் மறியலை கைவிட்டு, அசோக்குமாரின் உடலை வாங்கிச் சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் தலைமையிலான போலீசார் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் 3 குற்றவாளிகளும் பொன்னேரி அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் போலீசார் பொன்னேரிக்கு விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: நாங்கள் கஞ்சா பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்வதாகவும் உள்பட பல்வேறு தகவல்களை போலீசாருக்கு கொலை உண்ட அசோக்குமார் தகவல் தெரிவித்து வந்தது சந்தேகமாக இருந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு அசோக்குமார் கிராமத்தில் நடைபெற்ற விழாவின்போது மனோவிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்து முட்டி போட வைத்துள்ளார். இதனால் மனோவிற்கு அசோக் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சம்பவத்தன்று அசோக்குமாரை ஒரு சிறுவன் செல்போன் மூலம் மனோ ஒருவருக்கு ஒருவர் வா நேரில் மோதிக் கொள்ளலாம் என்று அசோக் குமாருக்கு சவால் விட்டு அழைத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அசோக்குமார் எங்கடா இருக்கிற என்று கேட்டுவிட்டு சம்பவ இடத்திற்கு வந்ததும் திடீரென எதிர்பாராத விதமாக மனோ(23) சின்னு(21) விமல்(20) ஆகிய 3 பேரும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் தயாராக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பின்னந்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சர்வ சாதாரணமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி விட்டதாக தெரிவித்தனர். கொலை நடந்து 24 மணி நேரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.