நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய தீவிரவாத அமைப்பின் தலைரான குருபத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அதை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்து விட்டனர் என்றும் இதில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பதாக லண்டனில் இருந்து வரும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய வெளியுறவு துறை அதிகாரி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்நிலையில், குருபத்வந்த் சிங் மீதான கொலை முயற்சியில் நிகில் குப்தா(52) என்பவர் செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் செக் குடியரசு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சர்வதேச போதை கடத்தல் கும்பலை சேர்ந்த குப்தா விரைவில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். இந்த வழக்கில்,நிகில் குப்தா மீதான குற்றச்சாட்டுகள் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதில், நியூயார்க்கில் உள்ள அரசியல் செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதில் இந்திய அரசின் உளவுதுறை மூத்த அதிகாரி ஒருவருக்கு முக்கிய மூளையாக இருந்தார்.
கடந்த மே மாதம் அவர் நிகில் குப்தாவுடன் தொலைபேசியில் பேசும்போது, குப்தாவுக்கு எதிராக குஜராத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கூலி படையை ஏவி கொல்வதற்கு ரூ.83.33 லட்சம் பணம் தருவதாகவும் அவரிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அட்வான்ஸ் தொகையாக ரூ.12.50 லட்சம்கொடுக்கப்பட்டுள்ளது. கூலிப்படையை நடித்தவர்கள் அமெரிக்க அரசின் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சீக்கிய தீவிரவாதியை கொல்ல நடந்த சதியில் இந்திய அதிகாரிக்கு தொடர்பு: அமெரிக்க நீதிமன்றத்தில் தகவல் appeared first on Dinakaran.