×

ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேசுக்கு லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜ நிர்வாகியுமான ஆர்.கே.சுரேசுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் உள்பட 21 பேருக்கு எதிராக பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த மோசடியில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் மாநில பாஜ ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவருக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். அதை திரும்ப பெற பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 10ம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளது குறித்து பிரமாண பத்திரத்தை அவரது வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் தாக்கல் செய்தார். அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான் ஆஜராகி, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதற்கான காரணத்தையும், அதை ரத்து செய்யக் கூடாது என்பது குறித்த விளக்கத்தையும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆர்.கே.சுரேசுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது. அவர் டிசம்பர் 12ம் தேதி விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். அதுவரை அவரை காவல்துறை கைது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

The post ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேசுக்கு லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,RK Suresh ,Arudra ,ICourt ,Chennai ,Dinakaran ,
× RELATED கட்சியை டேமேஜ் ஆக்கியது ஆருத்ரா...