×

அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு தடை தொடரும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்த ஓபிஎஸ் அணிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், கட்சி பெயர், கொடி, சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வம் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கட்சியின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, தடையை நீக்க வேண்டும். பிரதான வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தடையை நீக்க கூடாது. தடையை நீக்கினால் அதிமுகவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றார். அதற்கு அரவிந்த் பாண்டியன், தடையால் எங்களுக்குத்தான் இழப்பு. ஓபிஎஸ்சை கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 6ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 6ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்றால் இந்த நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும். வழக்கு வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதுவரை ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடரும் என்று உத்தரவிட்டார். தனி நீதிபதி விதித்த தடையை எதிர்த்து ஏற்கனவே ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளிவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு தடை தொடரும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : OPS ,Madras High Court ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக...