×

பெரம்பலூர் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி 2 பேர் பலி

*4 பெண் உட்பட 5 பேர் படுகாயம்

பாடாலூர் : பெரம்பலூர் அருகே லாரி மீது சென்னை ஆம்னி பஸ் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஆம்னிபஸ் 40 பயணிகளுடன் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பஸ்சை திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபுரத்தை சேர்ந்த லத்திஷ் (37) என்பவர் டிரைவராக இருந்தார்.

இந்த பஸ், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்தது. அப்போது முன்னால் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா பழவிளையை சேர்ந்த பால்ராஜ் மகன் பிரதீஷ் (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த விருதுநகர் மாவட்டம், சிவந்திநகரை சேர்ந்த அந்தோணிராஜ் (51), மதுராந்தகம் நெடுங்கல் பகுதியை சேர்ந்த கோபி மகன் ஞானசேகர் (30), திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாடு பகுதியை சேர்ந்த தங்கம் மனைவி இசக்கியம்மாள் (55), ராமகிருஷ்ணன் மனைவி லட்சுமி (51), தர்மர் மனைவி ஜோதி, ராமலிங்கம் மனைவி விஜயலட்சுமி (50) ஆகிய 6 பேரும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தோணிராஜ், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரம்பலூர் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Badugayam Padalur ,Chennai ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...