×

அரசு உறுதிமொழிக்குழு நாளை சேலம் வருகை

சேலம், நவ. 29: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு நாளை சேலம் மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு, கலெக்டர் கார்மேகம் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்ரபாணி, பழனியாண்டி, மணி, ரூபி ஆர்.மனோகரன், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவினர் சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழி நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையிலான உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் ரவி மற்றும் ஆகியோர் சேலம் மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அப்போது சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசு உறுதிமொழிகள் மீது, தொடர்புடைய துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்கள்.

இதனிடையே, சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு சேலம் வருகையையொட்டி, அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசினார்.
அப்போது, அரசு அலுவலர்கள் தங்கள் துறை தொடர்பான முழுமையான விவரங்களை குழுவிற்கு வழங்கிட ஏதுவாக தயார் நிலையில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், டிஆர்ஓ மேனகா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி, தனி டிஆர்ஓ (நில எடுப்பு) கீதா பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அரசு உறுதிமொழிக்குழு நாளை சேலம் வருகை appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu Legislative Assembly ,Government Pledge Committee ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி...