×

டிஎன்பிஎஸ்சி மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு உதவியாளர்கள் தேர்வு: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு உதவியாளர்கள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்றும், மாவட்ட அளவில் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வமான அமைப்பான மாவட்ட ஆள்தேர்வு மையம் மூலமாகவே போட்டித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தகுதியும், திறமையும் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானோர் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது பெரும் சமூக அநீதி. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் காலியாக உள்ள 2,534 தொடக்க நிலை பணியிடங்களை நகராட்சி நிர்வாகமே, தேர்ந்தெடுக்க கடந்த 14ம் தேதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு துறையும் தனித்தனியாக ஆள்களை தேர்ந்தெடுக்கத் தொடங்கினால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வேலையில்லாமல் போய்விடும். எனவே கூட்டுறவுத்துறைக்கான பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்ப வேண்டும். கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்தேர்வு மையங்களை கலைக்க வேண்டும்.

The post டிஎன்பிஎஸ்சி மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு உதவியாளர்கள் தேர்வு: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Tamilnadu ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து: ராமதாஸ் வரவேற்பு