×

முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


சென்னை: முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள காலணி தொழிற்சாலையை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய முதல்வர்; கடந்த ஆண்டு நவம்பர் 28-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பீனிக்ஸ் கோத்தாரி காலணி தயாரிப்பு ஆலையை ஒரே ஆண்டில் அந்நிறுவனம் கட்டி முடித்துள்ளது. கடந்த ஆண்டு சிப்காட் தொழிற்பூங்காவை தொடங்கிவைத்து பீனிக்ஸ் கோத்தாரி நிறுவன ஆலைக்கும் அடிக்கல நாட்டினேன்.

சரியாக ஓராண்டு காலத்தில் ஆலையின் தொடக்கவிழாவில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தொழில் செய்வதற்கு தமிழ்நாடு மிகவும் சாதகமான மாநிலம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பீனிக்ஸ் கோத்தாரி தொழிற்சாலை. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. தமிழ்நாடு காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் கொள்கையை கடந்த ஆண்டு வெளியிட்டது அரசு. காலணி கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டதை அடுத்து அத்துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியை பார்க்கும்போது 2030-க்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு விரைவில் அடையும். ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர உள்ளன இவ்வாறு கூறினார்.

The post முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Phoenix ,Perambalur ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...