அரியலூர், நவ.28:அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த ஆதனக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட முதுகுளம் கிராம மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், அப்பகுதி மக்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
இக்கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்குழாய் அமைத்து, இரண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் கிராமத்திலுள்ள அனைத்து தெரு மக்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது நிலத்தடிநீர் மட்டும் குறைந்து வரும் நிலையில், ஆழ்குழாயும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியும் அவ்வப்போது பழுதடைந்து வருகிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் சீர்படுத்தி குடிநீர் விநியோகித்து வந்தாலும், அந்தநீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. நீர் கலங்கலாகவே வருகிறது. இதனால் குடிநீருக்காக அலையவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இக்கிராமத்தில் புதிய ஆழ்துளை மற்றும் மேல்நிலை நீர் தேக்கதொட்டிகளை அமைத்து, மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முதுகுளம் கிராம மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.