நாகப்பட்டினம்,நவ.28: நாகூர் பெரிய ஆண்டவர் கந்தூரி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என நாகூர் தர்கா நிர்வாகம் தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகூர் ஆண்டகையின் பெரிய கந்தூரி மகோற்சவம் வரும் டிச.14-ம் தேதி புனித கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 27ம் தேதி புனித கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான வரும் டிச.23ம் தேதி இரவு புனித சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 24ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே ரயில் மூலம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் நாகூரில் இருந்து திருச்சி, சென்னை, பெங்களூரு, கொல்லம், ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். காரைக்காலில் இருந்து-சென்னை செல்லும் ரயில்கள், காரைக்காலில் இருந்து -எர்ணாகுளம் செல்லும் ரயில்கள், மன்னார்குடியில் இருந்து -சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் நாகூர் வழியாக இயக்க வேண்டும். மேலும் திருச்சி மற்றும் தஞ்சாவூர் செல்லும் பாசஞ்சர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். நாகூர் ரயில் நிலையத்தில், பயணிகள் வசதிக்காக அதிக அளவில் கழிவறை வசதி மற்றும் குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும். நாகூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கந்தூரி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.