×

வடகிழக்கு பருவமழை காலங்களில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர் அறிவுறுத்தல்

 

திண்டுக்கல், நவ. 28: திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ காலங்களில் அதிக காற்று, மழையின்போது தோட்டக்கலைப் பயிர்களில் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: வடகிழக்குப் பருவ காலங்களில் அதிக காற்று, மழையின்போது தோட்டக்கலைப் பயிர்களில் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பயிர்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களில் கீழ்மட்ட இலைகளை அகற்றி மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு, யூகலிப்டஸ் கம்புகளை கொண்டு முட்டுக்கொடுக்க வேண்டும். வாழைத்தார்களை மூடி வைக்க வேண்டும். 75 சதவீதம் முதிர்ந்த நார்களை அறுவடை செய்ய வேண்டும். மேலும் மா, கொய்யா, சப்போட்டா பயிர்களில் காய்ந்த கிளைகளை அகற்ற வேண்டும். காற்றோட்டத்துக்கு கவாத்து செய்ய வேண்டும். மண் அனைத்து, வடிகால் வசதி செய்ய வேண்டும். நோய் தடுப்பு மருந்துகள் தூர்ப்பகுதியில் நனையும் படி தெளிக்க வேண்டும்.

காய்கறி பயிர் வயல்களில் நீர் தேங்காதவாறு வடிகால் வசதி செய்ய வேண்டும். உரமிடுதல் மற்றும் நீர் பாய்ச்சுதலை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து நடவு செய்த செடிகள் சாயாதவாறு பாதுகாக்க வேண்டும். பசுமைக்குடில், நிழல் வளைக்குடிலில் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகள் தங்கள் பயிர்களை இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

The post வடகிழக்கு பருவமழை காலங்களில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul district ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை