×

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இரு பயனாளிகளுக்கு மருத்துவ நிதியுதவி

 

ஊட்டி, நவ.28: ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். இதில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 155 மனுக்களை பெற்றுக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, எப்பநாடு கிராமத்தை சேர்ந்த தொரை என்பவருக்கு தலையில் புற்றுநோய் கட்டி ஏற்பட்டு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ செலவிற்காக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினார்.

பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த செல்வி பெரிடின் லாவண்யா என்பவருக்கு கர்ப்பப்பை சிகிச்சை மேற்கொள்ள ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதியிலிருந்து வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி), கண்ணன் (கணக்கு), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கல்பனா, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இரு பயனாளிகளுக்கு மருத்துவ நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : People's Grievance Day ,Ooty ,People's Reduction Day ,Dinakaran ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்