×

சிங்கபெருமாள்கோவில் அருகே வீடு புகுந்து செல்போன்கள் ஸ்மார்ட் வாட்ச் கொள்ளை: 2 பேர் கைது; கூட்டாளிக்கு வலை

செங்கல்பட்டு: மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனம் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாலிபர்கள் ஒன்றாக சேர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் பேச்சிலர்கள் தங்கியிருக்கும் வாடகை வீடுகளை குறிவைத்து இரவு நேரங்களில் திருட்டுகள் நடைபெறுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்நிலையில், சிங்கபெருமாள்கோவில் அருகே செட்டிபுண்ணியம், ஹயக்ரீவர் நகரில் நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து ஒரு மர்ம கும்பல் உள்ளே புகுந்து வாடகைக்கு தங்கியிருந்த வெளிமாநில வாலிபர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்சுகளை பறித்துக்கொண்டு தப்பி சென்றது. இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மர்ம கும்பல் தேடி வந்தனர்.

இதையடுத்து, கடந்த 24ம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிறுவனை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், நேற்று முன்தினம் இச்சம்பவத்தில் தொடர்புடைய கனித் (எ) ராஷா மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கிஷோரை தேடி வருகின்றனர்.

The post சிங்கபெருமாள்கோவில் அருகே வீடு புகுந்து செல்போன்கள் ஸ்மார்ட் வாட்ச் கொள்ளை: 2 பேர் கைது; கூட்டாளிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Singaperumal ,Chengalpattu ,Singaperumalkoil ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது: 605 கிலோ குட்கா, மினிலாரி பறிமுதல்