×

வேலூரில் இருந்து கூடுதலாக 90 போலீசார், 20 தனிப்பிரிவு போலீசார் அனுப்பி வைப்பு திருவண்ணாமலை பாதுகாப்புப்பணிக்கு

வேலூர், நவ.25: திருவண்ணாமலை தீப விழா பாதுகாப்பு பணிக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து மேலும் 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 90 போலீசார் மற்றும் 20 தனிப்பிரிவு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா நடந்து வருகிறது. தீப விழாவின் முக்கிய நிகழ்வான மகாதேரோட்டம் நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீப விழாவின் அச்சாராக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றும் பெருவிழா நாளை 26ம் தேதி மாலை நடக்கிறது. இதில் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்புப்பணியில் ஏற்கனவே வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து எஸ்பி மணிவண்ணன் தலைமையில் ஏற்கனவே ஏஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் மற்றும் 550 போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து நேற்று காலை 90 போலீசார் கூடுதலாக திருவண்ணாமலை தீப விழா பாதுகாப்புப்பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் 2 டிஎஸ்பிக்களும் சென்றுள்ளனர். அதோடு 20 தனிப்பிரிவு ஏட்டுகளும் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர காவல்துறையின் இதர பிரிவுகளை சேர்ந்தவர்களும் திருவண்ணாமலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூரில் இருந்து கூடுதலாக 90 போலீசார், 20 தனிப்பிரிவு போலீசார் அனுப்பி வைப்பு திருவண்ணாமலை பாதுகாப்புப்பணிக்கு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tiruvannamalai Defence Force ,Tiruvannamalai Deepa Festival ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...