×

அரசுப்பள்ளியில் படித்து வந்த 390 மாணவிகளில் 142 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: தலைமையாசிரியர் போக்சோவில் கைது

சண்டிகர்: அரியானா மாநிலம் சண்டிகர் அடுத்த ஜிண்டில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் கர்தார் சிங்(56), அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களை செய்து வந்துள்ளார். அவரது நடவடிக்கையால் அதிர்ந்து போன மாணவிகள் பலர், தங்களுக்கு பள்ளி தலைமையாசிரியரால் நடந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருந்தனர். சில மாதங்களாக பள்ளி தலைமையாசிரியரின் பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வந்தநிலையில், சில மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்து கூறினர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட எல்லா மாணவிகளும் ஒருங்கிணைத்து அவர்களிடம் தலைமையாசிரியரால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து கேட்டறிந்தனர். மாணவிகள் கூறியதை ேகட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் மாணவிகள் சார்பில் குடியரசு தலைவர், பிரதமர், தேசிய குழந்தைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு புகார் அளித்தனர். அதையடுத்து இவ்விகாரம் குறித்து விசாரிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட துணை ஆணையர் முகமது இம்ரான் ராசா கூறுகையில், ‘பாலியல் புகாரில் சிக்கிய பள்ளியின் தலைமையாசிரியரை போலீசார் ைகது செய்தனர். குறைந்தது 142 மாணவிகள் அவரால் பாலியல் ரீதியா துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களிடம் அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முன், தலைமையாசிரியருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். முதற்கட்டமாக 390 மாணவிகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 142 மாணவிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலைமையாசிரியர் கர்தார் சிங்கால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மாநில கல்வித்துறை அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு புதியதாக பெண் தலைமையாசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளியில் பணியாற்றி வந்த 16 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் குறித்து அரியானா மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி ரேணு பாட்டியாவும் விசாரணை நடத்தி வருகிறார்’ என்றார்.

The post அரசுப்பள்ளியில் படித்து வந்த 390 மாணவிகளில் 142 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: தலைமையாசிரியர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Bocso ,Chandigarh ,Kardar Singh ,Jind ,Chandigarh, Aryana ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்