பெரம்பூர்: அதிக வட்டி தருவதாக வந்த ஆன்லைன் விளம்பரத்தை நம்பி, ரூ.2 லட்சத்தை இழந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொளத்தூர், செந்தில் நகரை சேர்ந்தவர் அரவிந்தன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 19ம் தேதி இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு பகுதி நேர வேலை வாய்ப்பு சம்பந்தமாக ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதனை பார்த்து லைக் போட்டபோது, அரவிந்தனுக்கு ரூ.150 கிடைத்துள்ளது. தொடர்ந்து அவர்களை பாலோ செய்து அவர்கள் தரும் லிங்கிற்குள் சென்றபோது, நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தரப்படும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அரவிந்தன் ரூ.10 ஆயிரம் கட்டியுள்ளார். அதற்கு ரூ.13 ஆயிரத்து 800 கிடைத்துள்ளது. அதன்பிறகு அவர்கள் கூறியவாறு பல கட்டங்களைக் கடந்த அரவிந்தன், தனக்கு அதிக பணம் வரும் என்று ஆசையில் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் கட்டியுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில்தான் தான் ஏமாற்றப்பட்டதை அரவிந்தன் உணர்ந்துள்ளார். இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அதிக வட்டி தருவதாக ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.2 லட்சத்தை இழந்த வாலிபர்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

