×

நீட், ஜேஇஇ மாணவர்கள் தற்கொலை வழக்கு; தவறு பெற்றோரிடம் உள்ளது பயிற்சி மையத்திடம் இல்லை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: நீட், ஜேஇஇ மாணவர்கள் தற்கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தவறு பெற்றோரிடம் இருப்பதாகவும், பயிற்சி மையத்திடம் இல்லை என்று கூறி தீர்ப்பு வழங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ‘நீட்’, ‘ஜேஇஇ’ ஆகிய நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்பதற்காக வடமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர். அங்கு அளிக்கப்படும் பயிற்சியால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் மாணவர்களில் இந்தாண்டு மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். தற்கொலை சம்பவங்களை தடுக்க பயிற்சி நிறுவனங்களுக்கு சில கெடுபிடி உத்தரவுகளையும் மாநில அரசு பிறப்பித்துள்ளது. இருந்தும் அவ்வப்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ‘நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்களின் குறைந்தபட்ச தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மாணவர்களின் தற்கொலை குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி மும்பையைச் சேர்ந்த மருத்துவர் அனிருத் நாராயண் மல்பானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘கோட்டா தற்கொலை சம்பவங்கள் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரே பொறுப்பு.

மாணவர்களின் பெற்றோரிடமே தவறு உள்ளது. இந்த விசயத்தில் பயிற்சி நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டு கூறமுடியாது. பெற்றோர்களின் விருப்பத்தால், மாணவர்கள் அந்த பயிற்சி மையங்களில் சேர்க்கப்படுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறன்களை காட்டிலும், அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி, தற்கொலை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்’ என்று கூறியுள்ளார்.

The post நீட், ஜேஇஇ மாணவர்கள் தற்கொலை வழக்கு; தவறு பெற்றோரிடம் உள்ளது பயிற்சி மையத்திடம் இல்லை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : NEET ,SUPREME COURT SENSATIONAL VERDICT ,New Delhi ,Supreme Court ,JEE ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு