×

பல்லாவரம் அருகே எண்ணெய் கடையில் ₹80,000 கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வைரலால் பரபரப்பு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் காந்தி சாலை பகுதியை சேர்ந்தவர் சிவகேசன் (27). அதே பகுதியில் எண்ணெய் கடை வைத்துள்ளார். இவர், தனது கடையில் செக்கு எண்ணெய் மற்றும் பாதாம், முந்திரி பருப்புகளை விற்பனை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை சிவகேசன் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டரை திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த ₹80,000 திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து பம்மல் சங்கர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பைக்கில் வந்த 4 பேர் கடை ஷட்டர்களின் பூட்டுகளை இரும்பு கம்பிகளால் உடைத்து உள்ளே சாவகாசமாக சென்று, மின் விளக்குகளை எரியவிட்டவாறு, கல்லா பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றது பதிவாகியிருந்தது.
கடையில் இருந்து புறப்பட்டு செல்லும் முன்பு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த விலை உயர்ந்த முந்திரி, பாதாம் பருப்புகளையும் விட்டு வைக்காமல் திருடிச்சென்றதும் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

கடந்த 6 மாதத்திற்கு முன்பும் இதுபோன்று சிவகேசன் கடையில் ₹50,000 கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. அந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாதநிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதனிடையே, சிவகேசன் கடையில் கொள்ளையர்கள் திருடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post பல்லாவரம் அருகே எண்ணெய் கடையில் ₹80,000 கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Sivakesan ,Pammel Gandhi Road ,Dinakaran ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை