×

கவர்னர் பதவியை அகற்ற வேண்டும் ஆளுநர் இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு அடங்கியிருக்க வேண்டும்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: ‘‘ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் – அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியதுதான் மரபு’’ ஆகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பெற்ற சட்டமுன்வடிவுகளை மீண்டும் சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது: தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் – தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையைக் கெடுக்கும் வகையில் என்றுகூடச் சொல்ல மாட்டேன்; தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கின்றன என்பதையும் அனைவரும் அறிவார்கள். நிதி நெருக்கடி. ஒன்றிய அரசின் சில இடையூறுகள். இவை மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை எங்களால் செய்து காட்ட முடியும். இடையூறுகள் என்று நான் சொன்னதன் விளைவாகத்தான் இந்தச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதாக உள்ளது. பொதுவாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டங்கள், முக்கிய நிகழ்வுகளுக்காகவும், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காகவும் கூட்டப்படுவது வழக்கம்.

அதேபோல் நாம் இன்றைக்கு கூட்டியிருக்கும் சிறப்புக் கூட்டம், அவசர, அவசியம் கருதி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலும், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியும் கூட்டப்பட்டுள்ளது. மக்களாட்சித் தத்துவத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்தச் சட்டமன்றப் பேரவையில் நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார் ஆளுநர். “I withhold assent” அதாவது, தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, நாம் இங்கு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளை கடந்த 13ம் தேதி திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார்.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கே மீண்டும் நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம். அதற்காகத்தான் இன்றைக்கு இந்தச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. மக்களாட்சித் தத்துவத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைமிக்க ஒரு அரசால், மாநில நலன் கருதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாகரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதனை அவர் அரசிடம் கோரலாம்.

அதனை அரசு வழங்க வேண்டும்-அந்த வகையில் இதற்கு முந்தைய சில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்கு முறையாக எழுத்து மூலமாகவும், சம்மந்தப்பட்ட அரசு செயலர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரிலும் விளக்கம் அளித்துள்ளனர். எந்த ஒரு நிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் அவருக்கு வழங்கப்படாமல் இருந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், இந்தச் சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கின்றார் என்றுதான் பொருளாகும்.

10 சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட 12 சட்டமுன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் இவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம் ஆகும். ஜனநாயக விரோதம் ஆகும். மக்கள் விரோதம் ஆகும். மனச்சாட்சி விரோதம் ஆகும். அனைத்திற்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும். தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருப்பவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கி தருவதற்கு முயற்சிக்கலாம்;

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைப் பெற்றுத்தரலாம்; எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை வாங்கித் தரலாம்; புதிய ரயில்வே திட்டங்களைப் பெற்றுத் தரலாம்; மாநில ஆட்சிக்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார். அதோடு, தினந்தோறும் யாரையாவது கூட்டிவைத்துக் கொண்டு அவர் வகுப்பு எடுக்கிறார். விழாக்களுக்குச் செல்கிறார். செல்லட்டும். ஆனால் விதண்டாவாதக் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விளக்கம் அளிப்பதும் – விவாதம் செய்வதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது. அரசியல் சட்டத்திற்கு முழுவதும் மாறாக, தமிழக அரசுடன் ஆளுநர் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். எனவே, அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்” என்று குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து இக்கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தியுள்ளார்கள். நானும் பிரதமருக்கு இப்பிரச்னை குறித்து கடிதமும் எழுதியிருக்கிறேன். இந்த அனைத்து முயற்சிகளும் எவ்வித பயனும் தராததால்தான், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆளுநரிடம் தேங்கிக் கிடக்கும் அனைத்துக் கோப்புகள், சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துகள், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில், ஆளுநர் அவசர அவசரமாக 10 சட்டமுன்வடிவுகளுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல், கடந்த 13ம் தேதி கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத்தான் முழு அதிகாரமும் முதன்மையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200ன்படி, இந்தச் சட்டமுன்வடிவுகளை மீண்டும் பரிசீலித்து, ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கும் அதிகாரம் இந்த மாமன்றத்திற்குத்தான் உள்ளது. அந்த அடிப்படையில்தான், இந்த 10 சட்டமுன்வடிவுகளும் இன்றைக்கு உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. பாஜ ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். இப்போது உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்தவுடன் அவசர அவசரமாக கோப்புகளைத் திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகம் ஆடுகின்றார் ஆளுநர்.

அவருக்கு தெரிந்ததை அவர் செய்கிறார். செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாம் எப்போதும் சட்டத்தின் வழி நடப்பவர்கள். எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 200ன்படி அவர் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ள 10 சட்டமுன்வடிவுகளையும் நிறைவேற்றித் தருமாறு நூற்றாண்டு கண்ட இச்சிறப்புமிக்க சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களை தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* 10 சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட 12 சட்டமுன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம்; ஜனநாயக விரோதம்; மக்கள் விரோதம்; மனசாட்சி விரோதம் ஆகும். அனைத்திற்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும்.

The post கவர்னர் பதவியை அகற்ற வேண்டும் ஆளுநர் இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு அடங்கியிருக்க வேண்டும்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,
× RELATED அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக...