×

635 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

 

திருப்பூர், நவ.18: குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஐ.ஜி ஜோசி நிர்மல்குமார் உத்தரவுப்படி, எஸ்.பி பாலாஜி, டி.எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருப்பூர், நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய ரேஷன் அரிசியை காரில் கடத்தி செல்வதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மேனகா, எஸ்ஐ கார்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில், 635 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணன் (52) என்பதும், அவர் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி கள்ளச்சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்ததும், மாட்டு தீவணத்திற்கு கொடுக்கவும் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 635 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post 635 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,IG ,Joshi Nirmalkumar ,Civil Supply Crime Investigation Department ,SP Balaji ,DSP ,Sureshkumar ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...