×

வண்டலூர் அருகே பனைமரம் முறிந்து மின்கம்பி அறுந்து விழுந்ததில் 5 பசுமாடுகள் பரிதாப பலி

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வேங்கப்பன். இவரது விவசாய நிலத்தின் வழிநெடுகிலும் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளன. இதில் முருகமங்கலம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரின் 2 பசுமாடுகள், அதே பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன், பக்தன், சுந்தரமூர்த்தி ஆகியோரின் தலா ஒரு பசு மாடு என மொத்தம் 5 பசுமாடுகள் நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றிருந்தன. பின்னர் அந்த 5 பசுமாடுகளும் நேற்றிரவு வீடு திரும்பவில்லை. அந்த மாடுகளை உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இன்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேங்கப்பனின் விவசாய நிலத்தில், ஏற்கெனவே இடிதாக்கி எரிந்து கருகி, காய்ந்த நிலையில் இருந்த ஒரு பனைமரம் முறிந்து விழுந்திருந்தது. அதனுடன் அறுந்து விழுந்த மின்கம்பிகள்மீது, நேற்றிரவு மழைக்காக ஒதுங்கியிருந்த 5 பசுமாடுகள்மீது மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக இறந்து கிடப்பதை பார்த்து மாடுகளின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கண்டிகை துணை மின்நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். வண்டலூரில் உள்ள கால்நடை மருத்துவர் பிரேமா தலைமையில் மருத்து குழுவினர் இறந்து கிடந்த 5 பசுமாடுகளையும் பரிசோதனை செய்து, அப்பகுதியிலேயே புதைத்தனர். இதுகுறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதபோல கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோபி என்பவரின் பசுமாடு வழக்கம் போல் அப்பகுதி வயல்வெளியில் மேய்ச்சலுக்கு சென்று கொண்டிருந்தது. அங்கு அறுந்து விழுந்திருந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

The post வண்டலூர் அருகே பனைமரம் முறிந்து மின்கம்பி அறுந்து விழுந்ததில் 5 பசுமாடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Mudravancheri ,Venkapan ,Murugamangalam ,Keerapakkam Uratchi ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை