×

அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த தடை தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவைஅவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சி பெயர், கொடி, சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கட்சியின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்க முடியாது. கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதித்து இருக்க கூடாது என்று கோரியிருந்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மனுவை பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, ஓ.பி.எஸ். சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மனுவை இன்றே விசாரிக்க வேண்டுமென்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விரைவாக விசாரிப்பதற்கு என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் மனுதாரர் செயல்பட முடியாத நிலை உள்ளார் என்று கூறினார். இதனையடுத்து, அந்த வழக்கு நாளை (இன்று) முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த தடை தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,AIADMK ,Chennai High Court ,Chennai ,Dinakaran ,
× RELATED தனியார் சிற்றுந்துகளை...