×

ஆத்தூரில் உள்ள எஸ்.வி.எஸ். நகைக் கடையை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்..!!

சேலம்: ஆத்தூரில் உள்ள எஸ்.வி.எஸ். நகைக் கடையை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் வீராணம் வலசையூர் பகுதியை சேர்ந்தவர் சபரிசங்கர். இவர் எஸ்விஎஸ் என்ற பெயரில் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நகை கடைகளை வைத்திருந்தார். அதேபோல் ஆத்தூர், அரூர், தர்மபுரி, நாமக்கல் உள்பட 11 இடங்களில் கிளைகளை தொடங்கி நகை கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக அம்மாபேட்டை மற்றும் சீலநாயக்கன்பட்டியில் உள்ள நகை கடைகள் மூடப்பட்டிருந்தது.

இதனால், சீட்டு கட்டியவர்கள், நகை எடுக்க வந்தவர்கள் கடைக்கு வந்து பார்த்துவிட்டு சென்றனர்.பின்னர், அவர்கள் நகை கடை இரண்டு நாட்களாக மூடப்பட்டிருப்பதை குறித்து விசாரணை நடத்தியபோது சபரி சங்கர், கடைகளை நிரந்தரமாக மூடிவிட்டு நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. இதனால் நகை சீட்டு கட்டியவர்கள், நகை வாங்க வந்தோர் என ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல் ஆத்தூர், தர்மபுரி, நாமக்கல் உள்பட 11 இடங்களில் உள்ள நகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் அவர் பல கோடி மதிப்புள்ள நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த நகை சீட்டு கட்டியவர்கள், கடை ஊழியர்கள் ஆகியோர் கடைகள் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த அன்னதானப்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசில் புகார் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். கடை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதில் 4 பேர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அம்மாப்பேட்டை போலீசில் ரஞ்சித் என்பவர் ரூ.11 லட்சம் வரை நகைக்காக சீட்டு பணம் கட்டியதாக புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக 4 ஊழியர்களை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆத்தூரில் உள்ள எஸ்.வி.எஸ். நகைக் கடையை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி நகைச் சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் நகைக் கடை உரிமையாளர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post ஆத்தூரில் உள்ள எஸ்.வி.எஸ். நகைக் கடையை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : SVS ,Attur ,Salem ,Salem Veeranam ,Valasayur ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...