×

கைக்குழந்தையுடன் ஏற முயன்று ரயிலுக்கு இடையே சிக்கிய பெண்

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்று தவறி விழுந்து வட மாநில பெண் படுகாயமடைந்தார்.ஒடிசா மாநிலம் பர்கீஸ் பகுதியை சேர்ந்தவர் கபில் பகிரா. இவரது மனைவி காயத்ரி பகிரா (27). இவர்களும், உறவினர்கள் 27 பேரும் தீபாவளியையொட்டி மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ரயிலில் வந்தனர். கடந்த 11ம் தேதி கோவை ஈஷா யோக மையத்துக்கு சென்றுவிட்டு குடும்பத்துடன் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏற திட்டமிட்டனர். அதிகாலை 2.55 மணிக்கு ரயில் திருப்பூர் நடைமேடை 2-ல் வந்து நின்றது. அவர்கள் ஏற வேண்டிய பெட்டி நிற்கும் இடம் தெரியாமல் தூரத்தில் நின்றதாக தெரிகிறது.

அனைவரும் ஏறுவதற்குள் ரயில் கிளம்பியது. அந்த நேரத்தில் காயத்ரி பகிரா கைக்குழந்தையுடன் ஓடி வந்து படிக்கட்டில் ஏற முயன்றார். அப்ேபாது தவறி கீழே விழுந்தார். இதில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். கையில் வைத்திருந்த குழந்தை நடைமேடையில் விழுந்ததால் பயணிகள் ஓடிச்சென்று மீட்டனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதில் காயத்ரி பகிராவுக்கு வலது கை, இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ரயிலில் ஏறும்போது கைக்குழந்தையுடன் பெண் தவறி விழுந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

The post கைக்குழந்தையுடன் ஏற முயன்று ரயிலுக்கு இடையே சிக்கிய பெண் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur railway ,Odisha ,
× RELATED இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்