புதுடெல்லி: சட்டீஸ்கர், ம.பி, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பணியில் இருந்து 3 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி மூன்று தேர்தல் பார்வையாளர்களை தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் தேர்தல் பணியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி லால்டின் குமா ஃபிராங்க்ளினுக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அனுராக் படேல் பொதுப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சியோனி, மால்வா மற்றும் ஹோஷங்காபாத் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பொதுப் பார்வையாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஆர்.கிரஷூக்கு பதிலாக உதய் நாராயண் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மிசோரமின் லுங்லே மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட செலவின மேற்பார்வையாளர் ஐஆர்எஸ் அதிகாரி கவுரவ் அவஸ்தி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த மூன்று அதிகாரிகளாலும் தவறான நடத்தை மற்றும் நடத்தை விதிகளை மீறியதற்காக நீக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அவர்களின் பணி சேவை புத்தகத்தில் குறிப்பிடவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.
The post சட்டீஸ்கர், ம.பி, மிசோரமில் 3 தேர்தல் அதிகாரிகள் நீக்கம் appeared first on Dinakaran.