×

பெரியார், காமராஜரை இழிவுபடுத்தும் அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக பல கட்டங்களாக விட்டுவிட்டு பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பெரும் பணத்தை செலவு செய்து கட்சியினரை திரட்டி, குறிப்பிட்ட நகர வீதிகளில் அந்த பாத யாத்திரை நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றுகிற அண்ணாமலை, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்கிற மமதையில் காழ்ப்புணர்ச்சியோடு சர்ச்சைக்குரிய விஷமத்தனமான கருத்துகளை கூறி வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோர் குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.

இவரைப் போல இழிவாக கருத்து கூறியவர்கள் கடந்த காலங்களில் வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்பட்டது திடீர் அரசியல்வாதியான அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அண்ணாமலையை பொறுத்தவரை ஆட்டைக்கடித்து, மாட்டை கடித்து தற்போது மனிதனை கடிக்க வந்திருக்கிறார். தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக ஊறிப் போன சமூக அடக்குமுறைகளை, அநீதிகளை, சாதிய ஏற்றத் தாழ்வுகளை, தீண்டாமை கொடுமைகளை துடைத்தெறிவதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டு தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அற்புதமான தலைவர் தந்தை பெரியார். கடவுள் மறுப்பு கொள்கையை பகுத்தறிவின் அடிப்படையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தந்தை பெரியார் பரப்புரை மேற்கொண்டு வந்தார். இதில் மாற்று கருத்து கூறவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

ஆனால் அண்ணாமலையைப் போல நாகரீகமற்ற முறையில் பெரியாரை விமர்சனம் செய்தது கிடையாது. ரங்கம் கோயிலுக்கு முன்புள்ள பெரியார் சிலையை அகற்றுவது தான் நோக்கம் என்று கூறுகிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மகாத்மா காந்தி படுகொலையில் குற்றவாளியான சாவர்க்கர் படத்தை பாஜக திறந்து வைத்ததற்கு கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால், அந்த படத்தை அகற்ற வேண்டுமென்று கோரி எவரும் போராட்டம் நடத்த முன்வரவில்லை. காந்தியடிகளை கொன்ற கோட்சேவை தியாகி என்று பிரக்யாசிங் தாகூர் கூறியதற்காக பாஜ அவர் மீது நடவடிக்கை எடுத்ததா? இந்திய விடுதலையைப் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியை இழிவுபடுத்துகிற பா.ஜ.க.வுக்கு என்ன தண்டனை கொடுப்பது ? இதற்கெல்லாம் அண்ணாமலை விளக்கம் கூறுவாரா? சமூகநீதியை பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது.

இத்தகைய அருவெறுக்கத்தக்க அநாகரீக பேச்சுகளினால் பாஜ குழிதோண்டி புதைக்கப்படுவது உறுதி. தமிழக அரசியல் வரலாற்றில் இவர்களது பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொண்டு பேசுவது நல்லது. இத்தகைய பேச்சுகளினால் கடுமையாக பாதிக்கப்படப் போவது அண்ணாமலை அல்ல. மாறாக, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள் உதவப் போகிறது. எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பெரியார், காமராஜரை இழிவுபடுத்தும் அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Periyar ,Kamaraja ,KS Azhagiri ,Chennai ,Tamil Nadu Congress ,President ,Tamil Nadu ,BJP ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...